1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2023 (11:21 IST)

தாம்பரம் ரயில்நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்… மின்சார ரயில்கள் ரத்து!

மிக்ஜாம் புயல் காரணமாக நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் கனமழை பெய்து பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளனர். பல  இடங்களில் வெள்ளம் ஆறாக ஓடும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை வருத்தம் கொள்ள செய்துள்ளன.

பல இடங்களில் இடுப்பளவு மற்றும் கழுத்தளவு தண்ணீர் சாலைகளில் ஓடுகிறது. மேலும் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப் பட்டு வருகிறார்கள். சென்னை மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்களையும் அமைத்துள்ளது.

வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் செங்கல்பட்டு- சென்னை கடற்கரை மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.