செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (07:49 IST)

கிளாம்பாக்கம் சென்ற பேருந்து மீது இளைஞர்கள் கல்வீச்சு.. மதுரவாயல் அருகே பரபரப்பு..!

சென்னை மதுரவாயல் அருகே கிளாம்பாக்கம் நோக்கி சென்ற பேருந்து மீது இளைஞர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் தென் மாவட்ட பேருந்துகள் இனி கிளம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்பும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனால் பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே கிளாம்பாக்கம் செல்வதற்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்த நிலையில் கிளம்பாக்கம் நோக்கி செல்லும் பேருந்து ஒன்று வந்தது. அந்த பேருந்தில் ஏறி கிளாம்பாக்கம் செல்லலாம் என பயணிகள் நினைத்திருந்த நிலையில் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இதனை அடுத்து இளைஞர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதனை அடுத்து அந்த இளைஞர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Edited by Siva