1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stolen satatues are return by same thieves in Manamadurai

திருடிய ஐம்பொன் சிலைகளை, மீண்டும் கோவில் முன் வீசிச்சென்ற கொள்ளையர்கள்..

கோவில்
சிவகங்கையில் கடந்த மாதம் திருட்டு போன ஐம்பொன் சிலைகளை மீண்டும் கோவிலின் முன்பே வீசி விட்டுச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் உள்ள இடைக்காட்டூரில் கரியமாணிக்கம் பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.ஆனால் இந்த கோவிலில் பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லை.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கருவறை கதவை உடைத்து, அங்கிருந்த ஐம்பொன் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி சிலைகளை திருடி கொண்டு தப்பியோடினர். அந்த சிலைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் ஆகும். இது குறித்து அக்கோயிலின் அர்ச்சகர் சீனிவாசன் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை கோவிலை திறக்க அர்ச்சகர் சீனிவாசன் வந்தபோது, கோவிலின் வாசலில் திருட்டுப்போன அந்த 3 ஐம்பொன் சிலைகள் கிடந்துள்ளன. அதை கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சிலைகளை பார்வையிட்டனர். அதை தொடர்ந்து நடந்த விசாரணையில், திருடியவர்கள் போலீஸில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் சிலைகளை வீசி விட்டுச்சென்றிருக்கலாம் என கருதப்பட்டது. எனினும் சிலைகளை கடத்திய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இது குறித்து அந்த கோவிலை அனு தினமும் தரிசிக்கவரும் பக்தர்கள், கடவுளின் சக்தியால் தான், சிலைகள் மீண்டும் கோயிலுக்கே வந்துள்ளது என நம்புகிறார்கள். ஆகம விதிப்படி பூஜைகளும், பரிகாரமும் செய்யப்பட்ட பிறகு கோவிலுக்குள் ஐம்பொன் சிலைகள் வைக்கப்படும் என தெரியவருகிறது.