வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (21:32 IST)

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சியா?

கடந்த சில நாட்களாக துக்ளக் பெயர் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் உள்பட பல சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் ரஜினிகாந்த் பேசியது மட்டும் சர்ச்சைக்குள்ளாகியது. பெரியார் குறித்து அவர் அவமரியாதையாக பேசி விட்டதாகவும் எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பெரியார் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்
 
இந்த நிலையில் இன்று மாலை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மூன்று இரண்டு சக்கர வாகனங்களில் 6 மர்ம நபர்கள் வந்ததாகவும் அவர்கள் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த பகுதியில் காவல்துறையினர் வந்ததாகவும் இதனை அடுத்து குண்டுவீசும் முயற்சியை கைவிட்டு விட்டு அந்த 6 பேரும் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது குருமூர்த்தி வீட்டிலும் குண்டு வீச முயற்சி செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதனை அடுத்து குருமூர்த்தி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது