1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (14:28 IST)

எடப்பாடிக்கே அல்வா கொடுக்கும் மர்ம நபர்கள்.. பின்னணி என்ன??

எடப்பாடியின் பகுதியிலேயே, கள்ள நோட்டுகளை மர்ம நபர்கள் புழக்கத்தில் விட்டுள்ளதால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் சில நாட்களாகவே மர்ம நபர்கள், 50 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றி வருவதாக கூறப்படுகின்றது. தற்போது ஆடி பண்டிகை காலம் என்பதால், திருவிழா கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் 50 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றி விடுகின்றனர்.

இந்த கள்ள நோட்டுகள் புழக்கத்தில் சுற்றுவதால், கடைக்காரர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது கடைகாரர்கள் தங்களது நோட்டுகளை வங்கியில் செலுத்தும்போது, அது கள்ள நோட்டு என்று திரும்பி வந்துவிடுகிறது. இதனால் வியாபாரிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் மர்ம கும்பலை கூண்டோடு கண்டுபிடித்து, அவர்களை கைது செய்யவேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள வியாபாரி ஒருவர், மர்ம நபர்களால் மாற்றப்படும் கள்ள நோட்டுகள், உண்மையான நோட்டின் வண்ணத்திலேயே உள்ளது எனவும், ஆனால் அதே நேரம் அந்த கள்ள நோட்டுகளில், உண்மையான நோட்டின் நடுவில் உள்ளது போன்ற, ஆர்.பி.ஐ என்ற எழுத்துகள் இல்லை எனவும் கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியிலேயே, மர்ம நபர்களால் கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்பட்ட செய்தி சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.