1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (14:41 IST)

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

Senthil Balaji
செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நான்கு மாத அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
 
இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
 
மேலும்  செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

 
செந்தில் பாலாஜி வழக்கை 3 மாதங்களில் முடிக்க கடந்த பிப்ரவரியில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திறந்தது குறிப்பிடத்தக்கது.