1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (10:48 IST)

தில் இருந்தா பாஜக தலைமை இத செய்யட்டும்: சீமான் சவால்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்தும் பாஜக குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக கட்சிகளுக்குள் கட்சி தாவல்களும், உட்கட்சி பூசல்களும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக முக்கியஸ்தர்களிடையே பல்வேறு நிலைபாடுகள் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.  
 
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார்? என துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் முதல்வர் ஈபிஎஸ் இல்லத்தில் மாற்றி மாற்றி அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அடுத்தடுத்த ஆலோசனையால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இல்லம் உள்ள சென்னை கிரீன்வேஸ் சாலை பரபரப்பாக காணப்பட்டது.  
 
இந்த ஆலோசனைகள் நடந்து முடிந்த பின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை விட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி அறிக்கை வெளியானது. அதில், மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது. அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.  
 
பொறுப்பாளர்கள் தனிப்பட்ட கருத்துகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில்  தொலைக்காட்சிகளில் நிர்வாகிகள், கட்சித் தலைமை ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துகளை, அரசியல் கருத்துகள் தெரிவிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் இது குறித்தும் பாஜக குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, அதிமுக-வில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் உட்கட்சி பிரச்னை. பாஜக தலைமையில் முடிந்தால் தனி அணி உருவாக்கிக் காட்டட்டும் என்று சவால் விடுத்தார். அதோடு வரும் சட்டமன்ற தேர்தலில் தானும் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.