வெள்ளி, 20 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 பிப்ரவரி 2026 (14:48 IST)

திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்!.. ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்....

stalin ops
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இரண்டு முறையும், அவரின் மறைவிற்குப் பின் ஒரு முறையும் முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் சசிகலாவால் அந்த பதவியை இழந்தார். அதன்பின் கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகி விட்டு சசிகலா சிறைக்கு சென்று விட்டார். சசிகலா சிறையில் இந்த நான்கு வருடங்களில் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் பழனிச்சாமி..

ஒருபக்கம், பாஜகவின் முயற்சியால் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்தார். கட்சியில் அவருக்கு துணை முதல்வர் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனாலும், நம்பர் 2-வாக இருக்க விரும்பாத ஓபிஎஸ் பழனிச்சாமிக்கு எதிராக நடந்துகொண்டார். இதனால் அவரை கட்சியிலிருந்து நீக்கினார் பழனிச்சாமி.

கடந்த சில வருடங்களாகவே தனக்கென சில ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு தனியாக அரசியல் செய்து வருகிறார் ஒபிஎஸ். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, பாஜக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு பல முயற்சிகளை எடுத்தார் ஓபி.எஸ். ஆனால் அது நடக்கவில்லை..

இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டம் நடந்தபோது தமிழக முதல்வர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் இரண்டு முறை சந்தித்து பேசினார். அதன்பின் இதுபற்றி செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய போது ‘திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்கும்.. தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுக செய்த சாதனைகள் மக்கள் மனதில் பதிந்துள்ளது. 5 ஆண்டு கால சிறப்பான ஆட்சியை நிறைவு செய்ததற்காக  ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னேன்’ என கூறினார்.,

தை பிறந்தால் வழி பிறக்கும் என சொன்னீர்களே என கேட்டதற்கு ‘தமிழகத்திற்கு வழி பிறந்துள்ளது’  என கூறியிருக்கிறார். ‘திமுக அணிகள் இணைவீர்களா?’ என்ற கேள்விக்கு ‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என பதில் சொல்லியிருக்கிறார், மேலும் இன்று சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ் ஆதரவோடு ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார் என ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் கூறியது பற்றி கருத்து சொன்ன அவர் ‘ மக்கள் மனதில் இருப்பதைத்தான் ஐயப்பன் பேசினார்.. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்’ என ஓபிஎஸ் சொன்னார்.

தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு பழனிச்சாமி தடையாக இருப்பதால் அந்த கோபத்தில்தான் ஓபிஎஸ் இப்படி கருத்து தெரிவித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.