1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (11:06 IST)

விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது : சசிகலா அறிவிப்பு

ஜெ.வின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்நிலையில், ஜெ.விற்கு நெருக்கமானவர்கள், சசிகலாவின் உறவினர்கள் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
ஜெ.வின் வீடியோ வெளியானதை அடுத்து, இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, டிடிவி தினகரனுக்கும் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்நிலையில், கிருஷ்ணப்பிரியா இன்று ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிக்கவுள்ளார். 
 
மேலும், சிறையில் உள்ள சசிகலாவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அவர் நேரில் ஆஜராக முடியாவிட்டாலும், தனது தரப்பு வழக்கறிஞர் மூலம் அவர் பதிலளிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் எனவும், அவரின் சார்பில் அவரின் வழக்கறிஞர் ராஜ செந்தூரபாண்டியன் ஆணையத்தில் ஆஜராகி ஆறுமுகசாமியின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜெ.வின் நினைவு தினமான கடந்த டிசம்பர் 5ம் தேதி முதல் சசிகலா சிறையில் மௌன விரதத்தில் இருப்பதாகவும், அதனால், வழக்கறிஞர் மூலம் அவர் பதிலளிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என ஆறுமுகச்சாமி சம்மன் அனுப்புவார். அப்படி நடக்கும் போது சசிகலாவின் நிலைப்பாடு என்ன என்பது அப்போதுதான் தெரிய வரும்.