சசிகலா புஷ்பா ரூ.20 லட்சம் மோசடி செய்தார்: பகீர் புகார்!
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது பண மோசடி புகார் ஒன்று நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக உறுப்பினர் திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் வைத்து அடித்ததையொட்டி சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால் கட்சி தலைமை தன்னை பதவி விலக வற்புறுத்துவதாகவும், அடித்ததாகவும் மாநிலங்களவையில் பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார் அவர்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சசிகலா புஷ்பா. அவரது கணவர் மீது வழக்குகள் இருப்பதால் அவரும் சில தினங்களுக்கு முன்னர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பா மீது பணம் மோசடி புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையர் சிவஞானத்திடம் சாந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.
அதில், சசிகலா புஷ்பா தன்னிடம் நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்ட் பெற்றுத் தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டார் என கூறப்பட்டுள்ளது.