வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (07:22 IST)

சசிகலா சுற்றுப்பயணத்திற்கு டிடிவி தினகரன் உதவவில்லையா? அதிருப்தியில் தொண்டர்கள்..!

நான் அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்றும் கூறிக் கொண்டிருக்கும் சசிகலா தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கு தினகரன் தரப்பில் இருந்தும் அவருடைய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தரப்பிலிருந்தும் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களிடம் ’சசிகலா தேவையில்லாமல் யாரோ கூறிய தவறான யோசனையால் இந்த சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்றும் இந்த சுற்றுப்பயணம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்றும் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி சசிகலாவின் சுற்றுப்பயணத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் ரகசிய செய்தி அனுப்பி இருப்பதாக கூறப்படுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சசிகலா மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கம் ராஜா என்பவர் திடீரென ஒதுங்கிக் கொண்டதும் டிடிவி தினகரனை அறிவுரைப்படி தான் என்று கூறப்படுகிறது.

இதனால் டிடிவி தினகரன் மீது சசிகலா கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுகவாக இருக்க வேண்டும் என்றுதான் தொண்டர்கள் கூறிவரும் நிலையில் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை இல்லாமல் இருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva