1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (11:59 IST)

வேட்பு மனு தாக்கல் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்! – சமக சரத்குமார் கோரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 19ம் தேதி முடிய உள்ள நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டு சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் தொடங்க உள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி மார்ச் 19 வரை நடந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ள சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி 37 இடங்களில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ள சரத்குமார் “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் போராட்டம் நடத்தி வருவதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வங்கிகள் மூலமாக கணக்கு தொடங்குதல் மற்றும் பணம் செலுத்துதலில் பெரும் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய 19ம் தேதியே கடைசி என்னும் நிலையில் இரண்டு நாள் வங்கிகள் போராட்டத்தை கணக்கில் கொண்டு கடைசி தேதியை நீட்டிக்க தேர்தல் ஆணையம் ஆலோசிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.