1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (11:27 IST)

ஆதரிச்சி பேசிட்டு பிரியாணி கேக்கற மாதிரி…! – ட்ரம்ப்புக்கு முட்டு கொடுக்கும் எஸ்.வி.சேகர்!

அமெரிக்காவில் மற்ற நாட்டினர் குடியேற தடைவிதிக்கும் தீர்மானத்தை ட்ரம்ப் நிறைவேற்றியது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு ஆதரவாக பேசி வருகிறார் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் சூழலில், இந்தியாவிடம் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை அளித்து உதவும்படி கோரிக்கை விடுத்திருந்தது அமெரிக்கா. தொடர்ந்து இஸ்ரேல், பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் மருந்து கேட்டு வந்த நிலையில் மருந்து பொருட்களுக்கான ஏற்றுமதி தடையை ரத்து செய்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பப்பட்டுள்ளது.

இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்திருந்தாலும் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடை விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் குடியுரிமை பெற முயற்சித்து வரும் இந்தியர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவர்தம் குடும்பங்களும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மருந்துகள் கொடுத்து உதவிய இந்தியாவிற்கு ட்ரம்ப் சலுகை காட்டுவாரா என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் “ஏதோ ஒண்ணை அவரரத்துக்கு குடுத்து உதவிட்டு பதிலுக்கு சலுகை எதிர்பார்ப்பது திருட்டு பிச்சைக்கார புத்தி. அரசு இலவச டிவி குடுத்துட்டு தனியா கேபிள் காசு வாங்கிற மாதிரி.இல்லை இரண்டு வார்த்தை ஆதரிச்சு பேசிட்டு ஓசில பிரியாணி சாப்பிட்டு போற மாதிரி.புரியுதா.” என்று கூறியுள்ளார்.