செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (18:05 IST)

ரவுடிகளை இறக்கும் எடப்பாடியார் அணி? அடுத்த ப்ளான்!? - புகழேந்தி பகீர் குற்றச்சாட்டு!

OPS EPS
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினருக்கு எதிராக எடப்பாடியார் ஆதரவாளர்கள் ரவுடிகளை ஏவ திட்டமிட்டுள்ளதாக அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடியார் அணி கூறி வரும் நிலையில், ஒற்றைத் தலைமை தேவையில்லை என ஓபிஎஸ் அணியினர் மறுத்து வருகின்றனர். மேலும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் அணி கூறி வருகின்றது.

ஆனால் எடப்பாடியார் அணியோ பொதுக்குழு எடுக்கும் முடிவுதான் ஒற்றைத் தலைமையை தீர்மானிக்கும் என கூறி வருகிறது. இந்நிலையில் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பிலும், பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில காலம் முன்னதாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளருமான புகழேந்தி மயிலாப்பூர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புதிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலவரம் வெடிக்க வாய்ப்பிருப்பதால் பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
OPS EPS

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி “அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ரவுடிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வேண்டுமென திட்டமிட்டே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்த கூட்டத்தை நடத்த உள்ளனர்.

ஆகவே இந்த கூட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி தரக்கூடாது. கட்சி தொண்டர்கள் ரத்தம் சிந்துவதை ஓ.பன்னீர்செல்வம் விரும்பவில்லை. கட்சி ஒருங்கிணைப்பாளரான அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சியில் பதவி கிடைக்கும் என்பதற்காக வரவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மட்டுமே வந்துள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

புகழேந்தியின் இந்த புகாரை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்த பரபரப்பு கட்சி அளவில் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.