1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (13:42 IST)

குறையாத தண்ணீர்ப் பஞ்சம் – அமைச்சர் வேலுமணிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு !

தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக அமைச்சர் வேலுமணி வீட்டின் முன் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தலாம் என அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், ஒருசிலர் பெங்களூர், ஐதராபாத் கிளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியோ தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் நவம்பர் மாதம் வரைக் கையிருப்பு உள்ளது. தண்ணீர்ப் பஞ்சம் என்பது எதிர்கட்சிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி எனக் கூறி மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளார். ஆனால் நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இதனால் சென்னையில் உள்ள அமைச்சர் வேலுமணியின் வீட்டை மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் அவரது வீட்டுக்கும் அவருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்படும் சிறப்பு விஐபி எஸ்கார்ட் பாதுகாப்பு அளிதுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.