வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 19 ஜூன் 2019 (08:56 IST)

தண்ணீர்ப்பஞ்சம் எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்தி – அமைச்சரின் பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி !

சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சொல்வது வதந்தி என்று அமைச்சர் வேலுமணி கூறியிருப்பது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், ஒருசிலர் பெங்களூர், ஐதராபாத் கிளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி சென்னையில் தண்ணீர்ப்பஞ்சம் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். சென்னைக்கு சீராக குடிநீர் வழங்க நவம்பர் மாதம் வரை கையிருப்பு உள்ளது எனத் தெரிவித்தார். இது குறித்து பேசியுள்ள துரைமுருகன் ‘அமைச்சரின் பேச்சு வடிகட்டிய பொய். சென்னை மாநகரத்தில் தாய்மார்கள் குடங்களுடன் காத்துக் கொண்டிருப்பதையும், அலைவதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த பஞ்சத்துக்கு முழுக் காரணமும் அதிமுக அரசு. சென்னை மக்களுக்கு புழல் மற்றும் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்கள். அப்போதைய மக்கள் தொகைக்கு அதுப் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது புதிதாக எந்த திட்டத்தையும் அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. கடந்த வருடம் ஆந்திராவின் நிறைய தண்ணீர் வீணானது. அப்போதே அவர்களிடம் கேட்டு பூண்டி, சோழவரம் ஏரிகளை நிரப்பியிருந்தால் இந்த பஞ்சம் வந்திருக்காது. திருச்சியில் இருந்து ரயிலில் தண்ணீர் கொண்டு வந்து தரலாம்.’ எனக் கூறியுள்ளார்.