வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (12:55 IST)

பிரேமலதாவுக்கு அரசியல் தெரியவில்லை.! அமைச்சர் சிவசங்கர் பதிலடி.!!

Sivasankar
தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதாவிற்கு அரசு நிர்வாகமும், அரசியலும் தெரியவில்லை என்றும் அரசு திட்டங்களை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
 
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் பயனாளிகளுக்கு  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.19 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதி என்றார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாக உள்ளது என கூறியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், பிரேமலதா விஜயகாந்த் அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகிறார் என்று தெரிவித்தார்.
 
இந்தியாவிலேயே சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் உள்ள மிகப்பெரிய போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்றும் தற்போது 600க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

 
போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் இலவச திட்டம் கொடுத்ததால் தான் என்றும் அரசு திட்டங்களை பிரேமலதா கிண்டல் செய்வதை விடுத்து, பொதுமக்களுக்கான சேவையை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.