1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (10:15 IST)

பொதுகுழுவுக்கு அனுமதி தரக்கூடாது! – ஓபிஎஸ் மனுவை நிராகரித்த போலீஸ்!

நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஓபிஎஸ் அளித்த கோரிக்கை மனுவை காவல் ஆணையரகம் நிராகரித்துள்ளது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடியார் அணி உறுதியாக உள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில் அவர் அனுமதி இன்றி ஒற்றைத் தலைமை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு நடுவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பி வருவது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓபிஎஸ் கோரிக்கை மனுவை அளித்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை காவல் ஆணையரகம் நிராகரித்துள்ளது. பொது இடத்தில் கூட்டம் நடந்தால் மட்டுமே அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும். தனிநபர் கட்டிடத்தில் நடக்கும் கூட்டத்திற்கு காவல்துறை தடைவிதிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்வாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.