1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (09:40 IST)

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் - ஓபிஎஸ் டிவிட்!

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என ஓபிஎஸ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு.

 
கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்பதும் ஈபிஎஸ் இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதாகவும் எனவே விரைவில் கூட இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் ஒற்றை தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் சென்று உள்ள ஓபிஎஸ் தரப்பு அடுத்ததாக நாங்கள் தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க  இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே ஓபிஎஸ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்...
 
மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்ற போது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
 
இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.