வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (16:59 IST)

4 கிலோ எடை குறைந்த ப சிதம்பரம் – உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு !

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் சிறையில் இருந்த 42 நாட்களில் 4 கிலோ எடை குறைந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரம் சிபிஐ காவல் முடிந்து தற்போது நீதிமன்றக் காவலில் இப்போது திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கே மற்ற சாதாரணக் கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டு உணவுக் கூட மறுக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டு 42 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி சுரேஷ் குமார் கைட் விசாரித்தார். அப்போது சிதம்பரத்துக்கு எதிராக வாதாடிய சொலிசிட்டர் துஷார் மேத்தா ‘சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் அவர் வெளிநாடு தப்பிச்செல்லவோ, சாட்சிகளைக் கலைக்கவோ வாய்ப்புள்ளது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ எனக் கூறினார். ஆனால் அவரது வாதத்தை மறுத்த நீதிபதி ‘சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லவோ ஆதாரங்களைக் கலைக்கவோ மாட்டார். ஆனால் அவர் முன்னாள் மத்திய அமைச்சர் என்பதால் அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளிடம் தாக்கத்தை செலுத்த முயலுவார்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ப சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் ‘ ப சிதம்பரத்துக்கு சிறையில் வழங்கும் உணவு பழக்கமானது இல்லை. இதனால் அவரது உடல் எடை 4 கிலோ குறைந்துள்ளது. அவர் 42 நாட்கள் விசாரணைக்காக சிறையில் இருந்துள்ளார். இது போதுமான காலம்தான். இதற்கு மேலும் அவர் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது தண்டனையாக அமைந்து விடும். விசாரணைக்கு போதுமான ஒத்துழைப்பையும் அவர் கொடுத்துள்ளார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்