1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (14:54 IST)

பாஜக நியமிக்கும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை மிதிக்கிறார்கள்: ப.சிதம்பரம் காட்டம்

பாஜகவால் நியமனம் செய்யப்படும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை மிதிக்கிறார்கள் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக அரசுக்கும் தமிழக கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று ஸ்டெர்லைட் மற்றும் மசோதாக்கள் நிறுத்தி வைப்பது குறித்து ஆளுநர் பேசியதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறியதாவது:
 
'சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஒரு விசித்திரமான, வித்தியாசமான வரையறையை அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், 'மசோதா இறந்துவிட்டது என்று அர்த்தம்' என்று அவர் கூறியுள்ளார்.
 
உண்மையில், சரியான காரணமின்றி ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்திவைத்தால் 'நாடாளுமன்ற ஜனநாயகம் இறந்துவிட்டது' என்று அர்த்தம். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அல்லது நிறுத்திவைக்க அல்லது திருப்பி அனுப்ப ஆளுநர் கடமைப்பட்டவர். திருப்பி அனுப்பப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 
ஆளுநர் வெறும் அரசியலமைப்புச் சட்ட அதிகாரி. அவர் ஒரு குறியீட்டுத் தலைவர். அவருக்கான அதிகாரங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான விஷயங்களில் அவருக்கு அதிகாரம் இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட ஆளுநர் கடமைப்பட்டுள்ளார். ஆனால், பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தங்களது அதிகாரத்தை மீறி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள்'' 
 
இவ்வாறு ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva