1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (14:32 IST)

டிரிபிள் மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணங்கள்!

தொடர் விடுமுறையால் ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் 3 மடங்காக உயர்த்தப்பட்டது என தெரிய வந்துள்ளது.


நாடு முழுவதும் ஆகஸ்டு 15 திங்கட்கிழமை அன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறை உள்ள நிலையில் திங்கட்கிழமையும் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் சென்னையிலிருந்து செல்லும் அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் கூட்டம் அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி , மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக தொடர் விடுமுறையை வாய்ப்பாக பயன்படுத்தி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக நேரடி ஆய்வு மேற்கொள்ளுமாறு ஆர்டிஓ தலைமையிலான குழுவினருக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார்.

இருப்பினும் ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் 3 மடங்காக உயர்த்தப்பட்டது என தெரியவந்துள்ளது. வழக்கமான நாட்களில் சென்னையில் இருந்து திருச்சிக்கு ஆம்னி பஸ்களில் ரூ.800 வரை தான் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால், ரூ.2300 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதே போல சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.1000 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் நேற்று ரூ.3000 ஆக அதிகரித்தது.

இதே போல சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலிக்கு சுமார் ரூ.1400 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் ரூ.3500 வரை உயர்ந்தது. மேலும் ஓசூரில் இருந்து கோவில்பட்டிக்கு ரூ.4000 கட்டணம் வசூலிக்கப்பட்டது.