கரூர் விவகாரத்தை தொடர்ந்து தவெகவை தொடர்ந்து விமர்சித்து வந்த விசிக தலைவர் திருமாவளவன் தனக்கு விஜய் மேல் எந்த வன்மமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதை தொடர்ந்து தவெகவை திருமாவளவன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முக்கியமாக விஜய் பாஜக கட்டுப்பாட்டிற்குள் சிக்கியுள்ளதாகவும் பேசி வருகிறார்.
இதுகுறித்து தற்போது பேசிய திருமாவளவன் “எங்களுக்கு விஜய் மீது எந்த வன்மமும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்றோ, சிறையில் அடைக்க வேண்டும் என்றோ நாங்கள் வலியுறுத்தவில்லை. கூட்டநெரிசல் மரணங்களுக்கு அவர் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
கரூர் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது. கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விசிக சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை வைத்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன. விஜய்யை கையில் எடுக்க பாஜக முயற்சித்து வருகிறது. அப்படியிருக்க இந்த அசம்பாவிதத்தில் பொறுப்புடன் கரூர் வந்த முதலமைச்சருக்கு விஜய் நன்றிதான் சொல்லியிருக்க வேண்டும்.
சதிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K