1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (09:27 IST)

அடிமாட்டு விலைக்கு பிடுங்கப்பட்டதா அறிவாலய இடம்? நமது அம்மாவின் கட்டுரையால் பரபரப்பு

தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தை பார்த்து பஞ்சமி நிலம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு கருத்தை தெரிவித்ததில் இருந்து திமுகவுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. திமுகவுக்கு சொந்தமான முரசொலி கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு முரசொலி நிர்வாக அறக்கட்டளை தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் முரசொலி கட்டிடம் மட்டுமின்றி வேறு சில திமுகவுக்கு சொந்தமான கட்டிடங்களும் சர்ச்சைக்குள்ளானது என்று அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
 
ஏழை எளியோருக்கு ஊனமுற்றவர்களுக்கான அபயம் இல்லம் வருவதாக சொல்லி, அண்ணன் தம்பிகளான நில உரிமையாளர்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு பிடுங்கப்பட்டது தான் அறிவாலயம் என்னும் குற்றச்சாட்டும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரத்து வீட்டின் கொல்லைப்புறத்தில் மாநகராட்சி நிலம் அபகரிப்பு என்ற குற்றச்சாட்டும், அதுபோலவே முரசொலி நிலம் நிலமற்ற தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம் என்ற தகவல்களும், திருச்சியிலேயே பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்பட்ட திமுக மாவட்ட தலைமை அலுவலகமான அறிவாலயம் வக்பு போர்டுக்கு சொந்தமான நிலம்  என்ற தகவல்களும் இவை அனைத்தும் உணர்த்துவது ஒன்றே ஒன்றைத்தான், அது தங்களது ஆஸ்தி கொள்முதலில் திமுகவும் அதன் தலைமையும் வெளிப்படையான நேர்மையை கையாளவில்லை என்பதுதான்’ என்று நமது அம்மா நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த தகவல் தற்போது இணையதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது