1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (10:38 IST)

குஜராத் தேர்தலை கண்டு பயப்பட ஏதுமில்லை – முரசொலி!

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து முரசொலி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.


குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடந்த நிலையில் கட்ந்த சில நாட்களுக்கு முன்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் குஜராத்தில் பாஜகவும், இமாசல பிரதேசத்தில் காங்கிரஸும் ஆட்சி அமைக்க உள்ளது.

குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 154 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது. இதனைத்தொடர்ந்து குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கிறார் என குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் அறிவித்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
 

இந்நிலையில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து முரசொலி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குஜராத் மாநிலத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளதில் அதிசயம் ஏதுமில்லை. அங்கு அவர்களுக்கு வெற்றியை தேடி தந்தது இலவச வாக்குறுதிகளும், மதவாத வாக்குறுதிகளும் தான். ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பிரித்தது மட்டுமல்லாமல் பலவீனப்படுத்தியுள்ளது.

குஜராத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் 1,67,07,967. பாஜகவுக்கு எதிராக நின்றவர்கள் வாங்கிய மொத்த வாக்குகள் 3,23,81,808. இதை விட பெரிய தோல்வி பாஜகவுக்கு இருக்க முடியுமா? உள்ளூர் முழக்கங்களுக்கு கிடைத்த வெற்றியே இது . எனவே குஜராத் தேர்தல் முடிவுகளை பார்த்து மற்றவர்கள் பயப்பட ஏதுமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.