1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (10:18 IST)

மொழி உரிமை காக்க பாடுபடுவோம் - முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்!

முதல்வர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு மொழி உரிமை காக்க பாடுபடுவோம் என குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

 
தனது கேரள பயணத்திற்கு பின்னர் இந்த கடிதத்தை எழுதியுள்ள அவர் அதில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
 
தமிழ்மொழி - தமிழ் மக்கள் – தமிழ்நாடு, இந்த மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற உன்னத இலட்சியத்துடன் உத்வேகமாகப் பயணிக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையில் பணிபுரியும்  திராவிட முன்னேற்றக் கழக அரசு.
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழியாக வேண்டும் என்றும் ஆங்கிலத்திற்குப் பதில் இந்தி பேச வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது, நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளாகியிருந்தது. அவரது கருத்துக்கு, கண்டனக் குரலை உங்களில் ஒருவனான நான் உடனடியாக எழுப்பியிருந்தேன். 
இந்நிலையில், கண்ணூர் மாநாட்டில் கேரளாவில் தாய்மொழியான மலையாளத்திலும், அதன்பின் தொடர்ச்சியாக நம் தாய்மொழியான தமிழிலும், இறுதியாக ஆங்கிலத்தில் முழங்கியும், மாநில உரிமைகளுக்கான குரலை உயர்த்தினேன். 
 
இந்திய அளவில் மாநில உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு தேவை என்பதை எடுத்துரைத்தேன். தமிழ்நாடு தான் என் தாயகம். தமிழ்நாட்டு மக்கள்தான் என்னை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கைக்குரியவனான என் கவனம் முதன்மை பெறுவது, தமிழ்நாட்டின் மீதுதான். தமிழ்நாட்டில் செயல்படுத்துகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தாக்கமும் வீச்சும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது. 
 
தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம். அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். மாநில உரிமை - மொழி உரிமை  காத்திட, கண்ணும் கருத்துமாக, தொடர்ந்து பாடுபடுவோம். இந்திய ஒன்றியத்தில் எவராலும், சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை வரலாறு ஏற்கும் வண்ணம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.