வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2020 (20:30 IST)

புதிய கல்விக்கொள்கையை அதிமுக எதிர்க்காதது ஏன்? முக ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒரு சில அரசியல் கட்சிகள் எதிர்த்தும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காதது ஏன் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
சமூக நீதி மற்றும் பன்முகத்தன்மைக்கு எதிராக இருக்கும் புதிய கல்விக் கொள்கையை அதிமுக அரசு எதிர்க்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள முக ஸ்டாலின், தாய்மொழி வளரவும் ஆங்கிலம் கற்று உலகம் முழுவதும் தமிழர்கள் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழி கொள்கையை பறிகொடுத்த திட்டமா? என்றும் அவர் கூறியுள்ளார்
 
எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு சேர்த்தே துரோகம் செய்ய துணிந்து விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு உள்நோக்கங்களுடன்‌
திணிக்கின்ற புதிய கல்விக்‌ கொள்கை மாநில உரிமைகளுக்கும்‌ சமூகநீதிக்கும்‌ இந்தியாவின்‌ பன்முகத்தன்மைக்கும்‌ எதிரானது; இளைஞர்களின்‌ எதிர்காலத்தையும்‌ கடும்‌ நெருக்கடி இருளில்‌ தள்ளும்‌.
 
தமிழகத்தில்‌ எதிர்க்கட்சிகள்‌ கடுமையாக எதிர்த்து கண்டனத்தை உறுதியாகப்‌ பதிவு செய்துள்ள நிலையில்‌, அ.தி.மு.க. அரசு, தனது டெல்லி எஜமானர்களின்‌ கோபத்திற்கு பயந்து அமைதி காப்பது தமிழ்நாட்டின்‌ நூற்றாண்டு கால கல்வி வளர்ச்சிக்கு பெரும்‌ ஆபத்தை விளைவிப்பதாகும்‌.
 
தமிழ்நாட்டில்‌ இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை என பேரறிஞர்‌ அண்ணா ஆட்சியில்‌ நிறைவேற்றப்பட்ட இருமொழிக்‌ கொள்கைத்‌ தீர்மானத்தின்‌ பயனாக, தமிழ்மொழி வளர்ச்சி பெற்றதுடன்‌, ஆங்கிலம்‌ வாயிலாகத்‌ தமிழக மாணவர்கள்‌ உலக அளவில்‌ பெரும்‌ பொறுப்புகளை வகிக்கிறார்கள்‌.
 
வடஇந்திய மாணவர்களைவிடத்‌ தமிழக மாணவர்கள்‌ பெற்றுள்ள அந்த வளர்ச்சியின்‌ உயரத்தைச்‌ சிதைத்திடும்‌ நோக்கத்தில்‌, இந்தியையும்‌ சமஸ்கிருதத்தையும்‌ திணிக்க முற்படும்‌ மத்திய அரசின்‌ புதிய கல்விக்‌ கொள்கை குறித்து, பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ திருப்பெயரைக்‌ கட்சியின்‌ பெயரில்‌ இணைத்துக்‌ கொண்டிருக்கும்‌ அ.தி.மு.க. அரசின்‌ நிலைப்பாடு என்ன?
 
எம்‌ ஜி. ஆர்‌. அவர்களும்‌ ஜெயலலிதா அம்மையாரும்‌ கூட தங்கள்‌ ஆட்சிக்காலத்தில்‌ இந்தி ஆதிக்கத்திற்கு இடம்‌ தராமல்‌ இருமொழிக்‌ கொள்கையைத்‌ தொடர்ந்து கடைப்பிடித்து வந்த நிலையில்‌, அவர்களுக்கும்‌ சேர்த்தே துரோகம்‌ செய்யத்‌ துணிந்து விட்டதா இன்றைய அ.தி.மு.க அரசு?
 
இவ்வாறு திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்