1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (09:30 IST)

இந்தியா காணாத ஒரு போராட்டத்தை நடத்துவோம்! – மு.க.ஸ்டாலின் உறுதி!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இதுவரை இந்தியா காணாத அளவில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், திமுகவும் தனது சார்பில் சென்னையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதில் கலந்து கொண்ட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் 95வது பிறந்தநாள் விழா சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் , நல்லக்கண்ணு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பிறகு பேசிய மு.க.ஸ்டாலின் ” கடந்த 23ம் தேதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஒரு பெரும் பேரணியை நடத்தி முடித்திருக்கிறோம். இந்த போராட்டம் இத்தோடு முடிந்து விடவில்லை. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் போராட்டங்கள் தேர்தல் முடிந்த பிறகு மேற்கொள்ளப்படும். எப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் பேசி முடிவெடுத்து சென்னையில் பேரணியை நடத்தி காட்டினோமோ, அதேபோல் கட்சி தலைவர்களை மட்டுமன்றி, கட்சி அப்பாற்பட்ட தோழர்கள்,  நண்பர்கள், அமைப்புகளை அழைத்து கலந்து பேசி அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம். அந்த போராட்டம் தமிழகம் மட்டுமல்ல. இந்தியாவே இதுவரை காணாத அளவுக்கான ஒரு போராட்டமாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.