1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (13:02 IST)

ஒமைக்ரானை தடுக்கும் கேடயம் மாஸ்க் - ஸ்டாலின் பேச்சு!

தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். 
 
அதன்படி பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தார். மேலும் கோவின் இணையதளத்தில் இதற்கான முன்பதிவுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இதுவரை 7 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக முன் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்துள்ளனர். தமிழ்நாட்டில் 33 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. 
இதனிடையே தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பின்வருமாறு பேசினார், தமிழகத்தில் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மிரட்ட தொடங்கி இருக்கிறது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகரிக்கிறது. ஓமிக்ரானை தடுப்பதற்கான கேடயம் முகக்கவசம் தான்.
 
உயிர்காக்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். நிச்சயம் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொளுங்கள். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.