செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (14:38 IST)

உலக சாதனை படைத்த கேப்டன் நினைவிடம்.! மறைந்தும் பசியாற்றும் விஜயகாந்த்.!

Captain
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாகப் போற்றப்படுகிறது.
 
நடிகராக அறிமுகமாகி மக்கள் மனதில் என்றும் மறக்க முடியாத இடத்தை பிடித்தவர் விஜயகாந்த், திரைப்படங்களில் நடிக்கும் காலத்தில் இருந்தே தனது நற்பனி மன்றம் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். 
 
உணவு இல்லாதவர்கள் விஜயகாந்த் திருமணம் மண்டபம் அல்லது அவரது அலுவலகம் வந்தால் சாப்பிட்டு விட்டு செல்லலாம். தேமுதிக எனும் கட்சியை தொடங்கி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
கேப்டனுடைய மறைவு தேமுதிக தொண்டர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இறுதி மரியாதையை செலுத்தினர். இன்று வரையிலும் சென்னையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். பல ஊர்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் நினைவிடத்தை கேப்டன் கோயிலாக அவரது தொண்டர்கள் வழிபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது. கடந்த 125 நாட்களில் தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சென்றுள்ளனர். அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு பசியாற இங்கு உணவும் கொடுக்கப்படுகிறது.

 
பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவுச் சின்னமாக விஜயகாந்த் நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது. இதனை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அறிவித்து அதற்கான சான்றிதழையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.