1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (08:11 IST)

"டீன்ஸ்" திரைப்பட இசை காட்சிகளை திரையரங்கில் நான்கு காட்சிகளாக வெளியிடப்பட்டு உலக சாதனை - படத்தின் டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்!

"டீன்ஸ்" திரைப் படத்தை இசை காட்சிகளை திரையரங்கில் நான்கு  காட்சிகளாக வெளியிடப்பட்டு உலக சாதனை - படத்தின் டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்!
 
உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில்  வெளியிடப்பட்டது. 
 
டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
 
இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது. 
 
கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார். 
 
விரைவில் வெளியாகியுள்ள 'டீன்ஸ்' திரைப்படத்தை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் (கோயம்புத்தூர் தவிர) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது, கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை எல்மா பிக்சர்ஸ் என். எத்தில்ராஜ் பெற்றுள்ளார். 
 
இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார். ஆர். சுதர்சன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.
 
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பேசியதாவது... 
 
"அனைத்தையும் புதுமையாக செய்பவர் பார்த்திபன். 'டீன்ஸ்' திரைப்படத்தையும் அவ்வாறே உருவாக்கியுள்ளார் எத்தனையோ புதிய திறமைகளை அவர் இப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. பார்த்திபனுக்கும் அவரது குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
 
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது... 
 
"புதுமை என்றாலே பார்த்திபன் தான். குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. ஆனால் பார்த்திபன் அதை சாதித்து காட்டியுள்ளார். கடின உழைப்பாளியும் இறைபக்தி அதிகம் கொண்டவருமான இமான் இனிமையான பாடல்களை இப்படத்திற்கு வழங்கி உள்ளார்.  படத்தை பார்த்துவிட்டு இதில் பங்காற்றிய ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாழ்த்த காத்திருக்கிறேன், நன்றி.
 
நடிகை அக்ஷயா உதயகுமார் பேசியதாவது... 
 
"தனது ஒவ்வொரு படத்தின் போதும் அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று அனைவரையும் யோசிக்க வைப்பவர் பார்த்திபன் சார். . 'டீன்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன. இப்படம் கட்டாயம் வெற்றி அடையும் என்று நம்புகிறேன்." 
 
நடிகர் புகழ் பேசியதாவது... 
 
"குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது சவாலான விஷயம். பார்த்திபன் சார் அதை சாதித்து காட்டியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை பார்த்த உடனே திரைப்படத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. 'டீன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு குழந்தையாக நான் நடிக்க ஆசைப்படுகிறேன், நன்றி.
 
நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது... 
 
"என்னுடைய மகள் பார்த்திபன் சாரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிகிறார் என்பது மிகவும் பெருமையான விஷயம். 
 
டிரெய்லரை பார்த்த உடனேயே இது கட்டாயமாக திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் என்பது புரிகிறது.இதில் நடித்துள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்." 
 
இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசியதாவது... 
 
"பார்த்திபன் சார் என்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன். சாதனை மேல் சாதனைகளாக படைத்து இளம் இயக்குநர்களுக்கு உற்சாகமாகவும் போட்டியாகவும் திகழ்கிறார். 'அஞ்சலி'க்கு பிறகு இத்தனை சிறுவர்கள் நடித்துள்ளது 'டீன்ஸ்' திரைப்படத்தில் தான் என்று நினைக்கிறேன். டிரெய்லர் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது இப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்." 
 
நடிகர் விதார்த் பேசியதாவது... 
 
"இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் அவ்வளவு அருமையாக உள்ளன.படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  நிறைய பேசுகிறேன் நன்றி வணக்கம். 'டீன்ஸ்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் நிறைய பேசுகிறேன்." 
 
இயக்குநர் பேரரசு பேசியதாவது... 
 
"இத்திரைப்படத்தில் அனைத்துமே நிறைவாக அமைந்துள்ளன.  'டீன்ஸ்' திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள். பார்த்திபன் சாரின் 'புதிய பாதை'யே இன்னும் பழைய பாதையாகவில்லை, 33 வருடங்களுக்கு பின்னாலும் இன்னும் புதுமையாகவே உள்ளது ஆனால் அவர் மேலும் பல புதிய பாதைகளை போட்டுக்கொண்டே செல்கிறார்." 
 
 இயக்குநர் சரண் பேசியதாவது... 
 
"பார்த்திபன் சார் எப்போதும் உணர்ச்சி வசப்பட மாட்டார். உணர்ச்சி தான் அவர் வசப்படும். 'டீன்ஸ்' படத்தின் மூலம் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தையே தமிழுக்கு அவர் வழங்கியுள்ளார். அவருக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்."
 
நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது... 
 
"புதுமைகளின் பிறப்பிடம் பார்த்திபன் சார். அவர் என்ன செய்தாலும் வித்தியாசமாக இருக்கும். அதிலும் 'டீன்ஸ்'  திரைப்படம் மிகவும் புதிதாக உள்ளது. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்."
 
நடிகர் யோகி பாபு பேசியதாவது... 
 
"பார்த்திபன் சார் உடன் பணியாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவரிடம் கேட்டு வந்தேன். இறுதியாக 'டீன்ஸ்'  படத்தில் அந்த ஆசை நிறைவேறி உள்ளது. அவருடன் இன்னும் நிறைய திரைப்படங்களில் பணியாற்ற ஆவலாக உள்ளேன், நன்றி."
 
 இயக்குனர் நடிகர் கே பாக்யராஜ் பேசியதாவது... 
 
"நாளைய சூப்பர் ஸ்டார்களாக வளரப்போகும் 'டீன்ஸ்' படத்தில் நடித்துள்ள 13 இளம் கலைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். என்னுடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த பார்த்திபன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது மிகவும் பெருமை. எப்போதுமே வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் பார்த்திபன். அவரது இந்த 'டீன்ஸ்'  திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், நன்றி."
 
நடிகர் தம்பி ராமையா பேசியதாவது... 
 
"'டீன்ஸ்' திரைப்படத்தை காண்பதற்கு நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன். நடிகர், இயக்குநர் என்பதையும் தாண்டி பார்த்திபன் சார் ஒரு மிகச்சிறந்த கவிஞர். இந்த படத்தில் ஏழு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். எதை செய்தாலும் புதுமையாக செய்யும் பார்த்திபன் சார் பதிமூன்று முத்துக்களை இப்படத்திற்காக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார். அவர்கள் அனைவரும் நாளைய திரை வானில் சிறகடித்து பறக்க போவது உறுதி. இமானின் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன, கடின உழைப்புக்கு சொந்தக்காரர் அவர். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்."
 
 இசையமைப்பாளர் D. இமான் பேசியதாவது... 
 
"இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதற்காக பார்த்திபன் சாருக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்துள்ளோம்.
 
முதலில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில் தற்போது அது ஏழு பாடல்களாக வளர்ந்துள்ளது. பார்த்திபன் சாரும் நானும் எப்போதோ இணைந்து பணியாற்றி இருக்க வேண்டியது, அது இப்போதுதான் கைகூடி உள்ளது. அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் நன்றி என்றார்