1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2019 (08:44 IST)

நேற்றும் ஈயாடிய கடைகள் … இன்றும் இறைச்சி விற்கத் தடை – வியாபாரிகள் புலம்பல் !

தீபாவளிக்கு அடுத்த நாளான இன்று இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட்து. தீபாவளிப் பண்டிகை அன்று வீட்டில் அசைவ உணவுகளை எடுத்து சமைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் நேற்று தீபாவளியோடு அமாவாசையும் சேர்ந்து வந்ததால் பெரும்பாலானவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்துள்ளனர். இதனால் இறைச்சி வியாபாரம் பெரிதாக நடைபெறவில்லை.

தீபாவளிக்கு அடுத்த நாள் விற்பனை உயரும் என எதிர்பார்த்த நிலையில் இன்று மகாவீர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் ‘பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள், மகாவீர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு, திங்கட்கிழமை அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு உத்தரவின்படி, கண்டிப்பாக 28ஆம் தேதி அனைத்து இறைச்சி கூடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அரசு உத்தரவைச் செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதம் முழுவதும் விற்பனைக் குறைந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வியாபாரம் உயரும் என எதிர்பாத்த இறைச்சி வியாபாரிகளுக்கு இது பெருத்த சிக்கலை உருவாக்கியுள்ளது.