ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (10:41 IST)

வீடு புகுந்து பெண்ணை கதற கதற கடத்திய கும்பல்! – மயிலாடுதுறையில் பரபரப்பு!

மயிலாடுதுறையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து பெண்ணை கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவை சேர்ந்த 34 வயதான விக்னேஷ்வரன் என்பவர் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் விக்னேஷ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் விக்னேஷ்வரனின் நடத்தை பிடிக்காமல் அந்த பெண் அவரை விட்டு விலகியுள்ளார்.

இதனால் அடிக்கடி விக்னேஷ்வரன் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் இதுகுறித்து பெண் வீட்டார் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீஸார் முன்னர் இரு தரப்பினரையும் அழைத்து பேசி விக்னேஷ்வரனை கண்டித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 12ம் தேதி விக்னேஷ்வரன் அந்த பெண்ணை கடத்த முயன்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமறைவான விக்னேஷ்வரனை போலீஸார் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு பெண்ணின் வீட்டிற்கு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 15க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து இளம்பெண்ணை கடத்தியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக அனைத்து காவல் நிலையங்களையும் உஷார் செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு கடத்தல் நபர்களை பின் தொடர்ந்துள்ளனர்.

மயிலாடுதுறையில் கடத்தப்பட்ட பெண் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை விக்கிரவாண்டி அருகே போலீஸார் மறைத்து பிடித்துள்ளனர். கடத்தல்காரர்களிடம் இருந்து பெண் மீட்கப்பட்ட நிலையில் காரில் இருந்த விக்னேஷ்வரன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.