1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (22:26 IST)

தொடர் மழை எதிரொலி! பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிப்பு

கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் இந்த இரு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை மற்றும் திருப்பூரில் தொடர் மழை காரணமாக, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
 

இந்த நிலையில் கோவை மாவட்ட மழை பாதிப்பு குறித்த உதவி எண்களை அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். வெள்ளம் மற்றும் கனமழை குறித்த பாதிப்புகளை 0422 - 2390261, 2390262, 2390263 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், 8190000200 என்ற வாட்ஸ் அப் எண், 7440422422 என்ற செல்போன் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 

மேலும் கோவை, நீலகிரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவசியம் ஏற்பட்டால் அன்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரித்துள்ள மாவட்ட ஆட்சியர் தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்றி வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் கேரளாவிலும் கனமழை பெய்து வருவதால்  முல்லை பெரியாறு அணை 120 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.