வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:24 IST)

கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை- கோவில் பூசாரி மற்றும் வங்கி மேலாளர் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜர்.

கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.கொடநாடு பங்களாவில் புகுந்த கொள்ளை கும்பல், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. 
 
இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி"க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில்  பலியானார்.
 
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500"க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் அடிப்படையில்  ஒவ்வொருவருக்காக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
அதன் அடிப்படையில் கொடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக கோவில் பூசாரியாக இருந்து வரும் விக்னேஷ் என்ற நபருக்கு சிபிசிஐடி போலீஸ்  சம்மன் அனுப்பிருந்தனர். இதே போல புதுச்சேரி மாநில வங்கி மேலாளருக்கும் இந்த விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 
 
அதன்படி  கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு இருவரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.