1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (13:58 IST)

விபரீதத்தில் முடிந்த பேஸ்புக் பழக்கம்! கேரள பெண்ணுக்கு சென்னையில் நடந்த சோகம்!

சென்னையில் காதலை ஏற்றுக் கொள்ளாத பெண்ணின் முகத்தில் இளைஞர் ஒருவர் பாட்டிலை உடைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆம்பூரி போஸ்ட் பகுதியை சேர்ந்த இளம்பெண் சோனு ஜோசப். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த இவர் சென்னையில் உள்ள அபு பேலஸ் ரெஸ்டாரண்டில் பணியாற்றி வந்துள்ளார். கேரளாவில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் சோனுவுக்கு சென்னையை சேர்ந்த நவீன் என்ற இளைஞருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பேஸ்புக்கில் பழகிவந்த நிலையில் சோனு சென்னையில் வேலைக்கு சேர்ந்ததால் அடிக்கடி அவரை பார்க்க நவீன் வந்துள்ளார். பின்னர் அவர் சோனுவை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் சோனு அவரது காதலை ஏற்காததுடன், அவரை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த நவீன் நேற்று இரவு சோனு வேலை முடிந்து வருவதற்காக காத்திருந்தவர் சோனுவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து சோனு முகத்தில் தாக்கியதுடன், கைகளால் அவரது வயிற்றிலும் நெஞ்சிலும் தாக்கியுள்ளார்.

சோனுவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே நவீன் தப்பி ஓடியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனுவுக்கு 25 தையல்கள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் நவீனை கைது செய்துள்ளனர். பேஸ்புக் பழக்கத்தால் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K