வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஜூலை 2024 (12:49 IST)

அதிமுகவினர் வாழ்வில் முதல் முறையாக திமுகவிற்கு வாக்களித்துள்ளனர்: கேசி பழனிசாமி

kc palanisamy
அதிமுகவினர் வாழ்வில் முதல் முறையாக திமுகவிற்கு வாக்களித்துள்ளனர் என முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் சுமார் 5%,  பா.ம.க 25%, திமுக 65%க்கு மேல் பெற்றுள்ளது.

*புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் மற்றும் #ஜெயலலிதா அம்மா அவர்களின் புகைப்படத்தை வைத்து #பாமக வாக்கு கேட்டார்கள். அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் "எங்கள் தலைவர்களின் புகைப்படத்தை வைத்து வாக்கு கேட்பது ஒன்றும் தவறில்லை அது எங்கள் தலைவர்களை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இருக்கிறது" இன்று மறைமுகமாக உணர்த்தினார்
எடப்பாடி பழனிசாமி.

நாம் தமிழர் கட்சி அதிமுகவின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்தது. தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுக தொண்டர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சீமான் பிரச்சாரம் செய்தார்.  

ஆனால் எடப்பாடி பழனிசாமி எண்ணப்படி அதிமுக வாக்குகள் எதுவும் நா.த.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் போகவில்லை. அவர் வேண்டுகோள் விடுத்தபடி தேர்தலையும் யாரும் புறக்கணிக்கவில்லை. 40%ஆக இருந்து திமுக வாக்கு 65%ஆக உயர்ந்துள்ளது.

அதிமுகவினர் வாழ்வில் முதல் முறையாக திமுகவிற்கு வாக்களிக்கிற சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதை உணருங்கள். இரட்டைக் குழல் துப்பாக்கி போல திராவிட கொள்கையில் எதிரெதிர் துருவமாக பயணித்து வந்த திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளில் அதிமுக பலவீனம் ஆகும் பொழுது திராவிடம் என்று திமுக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. அதனுடைய பாதிப்பு அதிமுகவிற்கு வருகிறது. அது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இப்பொழுதாவது ஒன்று பட்ட அதிமுகவின் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்.


Edited by Mahendran