1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamalhassan comment on cauvery water issue

வீடு பற்றி எரியும் போது பீடி பற்ற வைக்கும் அரசியல் - கமல்ஹாசன் பேட்டி

Kamalhaasan
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

 
காவிரி நதிநீர் வழக்கில் இன்று இறுதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு 177.25 டிம்.சி. நீரை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல், தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டி.எம்.சி இருப்பதால்,  கர்நாடகாவிற்கு 14.75 டி.எம்.சி. கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு கையாலாகாத தமிழக அரசே காரணம் என திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், காவிரி நீர் யாருக்கும் சொந்தமில்லை எனக்கூறியிருப்பது ஆறுதலை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் இரு மாநில விவசாயிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். போராடுவது உதவாது. தீர்வு காண முயற்சிப்பதே சிறந்தது.
 
அதேபோல், வாக்கு அரசியலுக்காக அரசியல்வாதிகள் தேசியத்தை மறந்து பேசுகின்றனர். வீடு பற்றி எரியும் போது பீடி பற்றவைக்கும் வாக்கு அரசியலால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
 
நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவிட்டால், மக்கள் அந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். கிடக்கும் தண்ணீரை எப்படி பாசனத்திற்கு பயன்படுத்தபோகிறோம் என யோசிக்க வேண்டும்” என அவர் கூறினார்.