செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (12:13 IST)

மனம் நொந்து போயிருக்கிறது ; கண்களில் கண்ணீர் முட்டுகிறது - துரைமுருகன் விரக்தி

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு கையாலாகாத தமிழக அரசே காரணம் என திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

 
காவிரி நதிநீர் வழக்கில் இன்று இறுதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு 177.25 டிம்.சி. நீரை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல், தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டி.எம்.சி இருப்பதால்,  கர்நாடகாவிற்கு 14.75 டி.எம்.சி. கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தமிழக விவசாயிகளின் தேவைக்கு 264 டி.எம்.சி நீரை தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், 177.25 டி.எம்.சி தான் கிடைத்துள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள துரைமுருகன் “உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. பிரச்சனை குறித்து அறிந்த வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமிக்கவில்லை. அதனால்தான், 15 டி.எம்.சி நீரை இந்த கையாலாகாத அரசு இழந்துள்ளது. 
 
தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. நீரை கொடுக்க வேண்டும் என்ற இறுதி தீர்ப்பை கருணாநிதி பெற்றுக் கொடுத்தார். இந்த தீர்ப்பைக் கேட்டு என்  மனம் நொந்து போயிருக்கிறது. கண்களில் கண்ணீர் முட்டுகிறது” என அவர் கூறினார்.