சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (08:34 IST)

குவைத் தீ விபத்து.. மத்திய அரசுக்கு கமல்ஹாசனின் முக்கிய வேண்டுகோள்..!

குவைத் நாட்டில் ஆறு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 இந்தியர்கள் உட்பட சுமார் 50 பேர்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மத்திய அரசுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:

குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.

 பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Edited by Siva