1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (18:01 IST)

தமிழ் மீது பற்று இருப்பது போல காட்டிக்கொள்வதெல்லாம் நாடகமா? மோடிக்கு கமல் கேள்வி

மேடைகளில் தமிழ் மீது பற்று இருப்பதுபோல் காட்டிக்கொள்வதெல்லாம் நாடகமா? என பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து 17 பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்த நிலையில் தமிழில் மட்டும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. இதனை பல அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் இது குறித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல. மேடைப்பேச்சில் திருக்குறளை, பாரதியார் கவிதைகளைக் குறிப்பிட்டு தமிழ் மீது பற்று இருப்பது போல காட்டிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகமே. நிஜத்தில் தமிழ் நிலத்தின் பண்பாட்டின் மீது படையெடுப்பதும், உரிமைகளை வேரறுப்பதுமே தொடர்கிறது.