வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (09:31 IST)

கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு எப்போது?

இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியும் தமிழகத்தினை ஐந்து முறை முதலவராக இருந்து ஆட்சி செய்தவருமான கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை நவம்பர் 15-ந்தேதி திறக்கப்படவுள்ளது.

சமூக நீதிக்காகவும் பொருளாதார மாற்றத்துக்காவும் போராடிய பிராந்திய கட்சிகளில் திமுக விற்கு எப்போதும் இடமுண்டு. திமுக வரலாற்றின் முன்பாதி அண்ணாவாலும் பின்பாதி கலைஞராலும் எழுதப்பட்டது.

தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை ஆட்சி நடத்திய கலைஞர் அவர் ஆட்சியில் இல்லாமல் எதிர்கட்சியாக இருந்த போதும் சிறப்பாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். 70 ஆண்டு வரலாறு கொண்ட திமுக விற்கு ஐம்பது ஆண்டுக்கும் மேலாக தலைமை பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தியப் பெருமைக்குரியவர்.

தனது முதுமையிலும் ஓய்வின்றி உழைத்த கலைஞர் தனது 94 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 7 அன்று உயிரிழந்தார். அவரது உடல் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு சென்னை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைஞருக்கு திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 8 அடி உயரத்தில் கருணாநிதியின் முழு உருவ வென்கல சிலை தயாராகியுள்ளது. இந்த சிலையை கருணாநிதி இறந்த 100வது நாளான நவம்பர் 15-ந்தேதி திறக்க திமுக முடிவு செய்துள்ளது.

இந்த சிலைதிறப்பு விழாவுக்காக திமுக வின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி போன்றோரும் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலைதிறப்பு விழாவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.