1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jeyakumar answered to Namathi MGR article

அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை… நமது எம் ஜி ஆர் கட்டுரைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

Tamilnadu
சசிகலா அதிமுகவை மீட்டெடுப்பார் என்று அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் செய்தி வெளியிட்டு இருந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகிவிட்ட நிலையில் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சசிக்கலா மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவாரா? அதிமுக – அமமுக ஒன்றிணையுமா? போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி “சசிக்கலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ள 100 சதவீதம் வாய்ப்பில்லை” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு மறைமுகமான விமர்சன கட்டுரை வெளியிட்டுள்ள அமமுகவின் அதிகாரப்புர்வ நாளேடான நமது எம்ஜிஆர்,’ எத்தனை தீயசக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் தீட்டினாலும் அவை புஸ்வாணம் ஆகிவிடும் என்றும், பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி, சரணாகதி அடைந்து நிற்பதும், பதவி கிடைத்து விட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும்.

சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமர வைத்தவருக்கு காட்டும் விசுவாசும் இது தானா ? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சசிகலாவை அ.தி.மு.கவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்றுவிட்டு, நன்றி கெட்ட மனிதராக வலம் வருபவர்களுக்கும் உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்யும் துரோகிகளும் சரித்திரத்தில் நம்பிக்கை துரோகிகள், பச்சோந்திகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள் தனியாக நின்று டெபாசிட் வாங்க கூட யோக்கியதை இல்லாத பச்சோந்தி கூட்டங்கள் ஆணைப்போட்டு தடுத்தாலும், உங்களால் கோட்டை ஏறமுடியாது என பாஜகவை மறைமுகமாக சீண்டியிருக்கிறது நமது எம்.ஜி.ஆர். மேலும், அ.தி.மு.கவை சசிகலா மீட்டெடுப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’ என்று கூறப்பட்டுள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரைப் பற்றி பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ‘ஏற்கனவே சசிகலாவோ அல்லது அமமுகவோ அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என முதல்வர் உறுதியாக சொல்லிவிட்டார். சசிகலா உடல்நலன் குறித்து துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் கூறியது மனிதாபிமான அடிப்படையில்தான்’ எனக் கூறியுள்ளார்.