1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayakumar Slams DMK and Stalin

கோயபல்ஸ் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலினும், தினகரனும்: ஜெயக்குமார் ஆவேசம்!

கோயபல்ஸ் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலினும், தினகரனும்: ஜெயக்குமார் ஆவேசம்!

கோயபல்ஸ்
இந்த ஆட்சி மக்களால் வெறுக்கப்படுகிற ஆட்சி என ஸ்டாலினும் தினகரனும் தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். இதனை கண்டித்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
 
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை ஜனநாயகப் படுகொலை என்று கூற திமுகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது. ஜனநாயகப் படுகொலைக்கு சொந்தக்காரர்களே திமுகவினரும், ஸ்டாலினும் தான்.
 
சட்டப்பேரவையில் எங்களைப் பேச விடாமல் வெளியேற்றுவது, எங்கள் தலைவர்களை தாக்கிப் பேசுவது என ஜனநாயகப் படுகொலை செய்தவர்கள் திமுகவினர். எம்ஜிஆர், ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் அவமானப்படுத்திய திமுகவினர் ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் தாக்கினார்கள்.
 
எம்ஜிஆரை சட்டமன்றத்தில் தாக்க முயன்ற திமுகவினர், அன்று சபாநாயகராக இருந்த மதியழகனை கீழே தள்ளிவிட்டு விருதுநகர் சீனிவாசனை சபாநாயகராக அமரவைத்து சட்டசபையை நடத்தியவர்கள் ஜனநாயகப் படுகொலை குறித்துப் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது என்றார்.
 
மேலும், தினகரனும், ஸ்டாலினும் இந்த ஆட்சி மக்களால் வெறுக்கப்படுகிறது என்று தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு பொய்யை திரும்ப திரும்பக் கூறுவதால் உண்மையாகி விடாது என்றார்.
அடுத்த கட்டுரையில்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலை அனுப்பி அவமதிப்பு!