1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. How Rs.2 crore transfered to prision high officials

சசிகலாவிற்கு சலுகை ; ரூ.2 கோடி கை மாறியது எப்படி? - பரபரப்பு தகவல்

Sasikala
சிறையில் உள்ள சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்க பணம் எப்படி கை மாறியது என்பது தெரியவந்துள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த 14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.   
 
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக அவர்கள் சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், ரூபா மற்றும் டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு.


 

 
விசாரணையில், சசிகலாவிற்கு ஒரு தளத்தின் ஒரு பகுதி முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளதும், அதில் மொத்தம் 5 அறைகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த அறைகளையும் சசிகலா பயன்படுத்தி வந்துள்ளார். இதில் எல்லாவற்றுக்கும் மேலாக, சிறைத்துறை அதிகாரின் நாற்காலியில் அமர்ந்துதான் சசிகலா, தன்னை சந்திக்க வந்த பார்வையாளர்களை சந்தித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கட்டில், மெத்தை, தொலைக்காட்சி, தனி சமையலறை, சமைப்பதற்கு ஆட்கள் என சகல வசதிகளும் அவருக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட ரூ.2 கோடி லஞ்சம் எப்படி கை மாறியது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
இரட்டை இலை சின்னத்தில் தினகரனோடு, அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் போலீசார் கைது செய்திருந்தனர். அவரின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து பார்த்த போது, அதில் அவர் கர்நாடக முன்னாள் காவல்துறை அமைச்சர் பரமேஸ்வரின் உதவியாளர் வி.சி.பிரகாசிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
 
எனவே, டெல்லி போலீசார் அவரிடம் நடத்திய சோதனையில், சசிகலாவிற்கு சிறப்பு சலுகை செய்து கொடுப்பது தொடர்பாகவே மல்லிகார்ஜுனா தன்னிடம் பிரகாஷ் பேசியதாகவும், அதற்காக ரூ.2 கோடி தர அதிமுக அம்மா அணி தயாரக இருப்பதாக அவர் கூறியதாகவும் பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். 


 

 
தொடர் விசாரணையில், வி.சி.பிரகாஷ் உதவியுடன் துமகுருவை சேர்ந்தவரும், ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து வரும், கர்நாடக முன்னாள் காவல் துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு நெருக்கமான ஒருவர் மூலம் சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி ஹவாலா முறையில் பணம் கைமாறியுள்ளது தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து, இது தொடர்பான வங்கி கணக்குகள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக உயர் மட்டக்குழு தங்களின் முதல் கட்ட அறிக்கையை வருகிற 24ம் தேதி தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
கமல், ரஜினி அதிமுகவிற்கு வாங்க - செல்லூர் ராஜூ அழைப்பு