1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. High Court Judges Request Do not Drive as Cellphone

இருகரம் கூப்பி வேண்டுகிறோம்: ‘செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டாதீங்க’ உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள்

High Court
குடித்துவிட்டோ, செல்போனில் பேசியபடியோ தயவுசெய்து வாகனத்தை ஓட்ட வேண்டாம் என  இருகரம் கூப்பி வேண்டுவதாக  உயர்நீதிமன்ற நீதிபதிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.
கடந்த 2012ம் ஆண்டு, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளி ரகு என்பவர் மீது வேகமாக வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ரகு உயிரிழந்தார்.
 
இந்த விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம், ரகுவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு, ரூ.18.88 லட்சம் இழப்பீடு வழங்கும்படி 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. 
 
இதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
 
விபத்து நடந்த போது ரகுவின் மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரது பெண் குழந்தைக்கு தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கவில்லை.
 
இதை கருத்தில் கொள்ளாமல் மாவட்ட நீதிமன்றம் குறைவான தொகையையே இழப்பீடாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இழப்பீட்டு தொகை ரூ.25.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த தொகையை 4 வாரத்துக்குள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும்.
 
வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதை, அவர்களின் உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
 
குடிபோதையில், மொபைலில் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டும்போது வாகன ஓட்டி மட்டுமல்லாமல் மூன்றாவது நபரும் காயமடைகிறார். எனவே, சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என இருகரம் கூப்பி வேண்டுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில்  கூறியுள்ளனர்.
About Writer
vm
அடுத்த கட்டுரையில்
திமுக தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் - ராமதாஸ்