1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (15:54 IST)

பிணத்தை கயிறு கட்டி இறக்கிய சம்பவம்: ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு

வாணியம்பாடியில் மேம்பாலத்திலிருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கிய விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

வாணியம்பாடி அருகே நாராயணபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் ஆதி திராவிடர் மக்களுக்கு தனியாக மயானம் எதுவும் இல்லை. இதனால் இறந்தவர்களின் பிணத்தை பாலாற்றின் கரையோரம் தகனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம், அப்பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது பிணத்தை பாலாற்றின் கரையோரம் புதைக்க உறவினர்கள் எடுத்து சென்றனர். ஆனால் அந்த பாலாற்றுக்கு செல்லும் வழியில் உள்ள நில உரிமையாளர்கள் வழிவிட மறுத்தனர்.

இதனால் குப்பனின் பிணத்தை பாடை கட்டி 20 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இறக்கி, பாலாற்றின் கரையோரம் தகனம் செய்தனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அதி திராவிட மக்கள், தங்களுக்கென்று தனி மயானம் ஒதுக்கித் தருமாறு போராடி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், கலெக்டரின் உத்தரவின் பேரில் நாராயணபுரம் பகுதியில் உள்ள  அரசுக்கு சொந்தமான 3 ½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் ஆதி திராவிடர் மக்களுக்காக 50 செண்ட் இடத்தை தாசில்தார் ஒதுக்கீடு செய்தார். அங்கே தகனமேடை அமைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோரின் முன் நேற்று ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், “இறந்தவரின் பிணம் சாதி பாகுபாட்டின் காரணமாக பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கப்பட்டு, பின்னர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆகவே உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.