வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (11:08 IST)

2 ஆண்டுகளில் தனியாருக்கு நிகராக அரசு பள்ளி - அன்பில் மகேஷ் உறுதி!

அரசு பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து அரசு பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும் என கூறினார்.
 
மேலும் 9 வது முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.