பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி
தேர்தல் முடிவு ஏமாற்றம் தான் என்றாலும், பாஜகவுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும் என்று டெல்லி முதல்வர் அதிஷி பேட்டி அளித்துள்ளார்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜக 48 இடங்களை வென்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 22 தொகுதிகள் தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இந்த நிலையில், டெல்லி தேர்தல் முடிவு குறித்து முதல்வர் அதிஷி தெரிவிக்கும்போது, "எங்களுடன் உறுதியாக நின்ற டெல்லி மக்கள் மற்றும் என் கட்சித் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். சர்வாதிகாரம், குண்டர்கள் ராஜ்ஜியம் ஆகியவற்றிற்கு எதிரான போர் தொடரும்.
"தேர்தல் முடிவு ஆம் ஆத்மிக்கு பின்னடைவு தான். ஆனால் அதே நேரத்தில், டெல்லி மக்களுக்கும் நாட்டு மக்களுக்குமான போராட்டம் தொடரும். பாஜகவை தொடர்ந்து எதிர்த்து கொண்டிருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
"என்னுடைய தொகுதியில் நான் வெற்றி பெற்றாலும், அதை கொண்டாடுவதற்கான நேரம் இது இல்லை. பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும்" என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Edited by Mahendran