1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (14:25 IST)

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? - இன்று மாலை ஆளுநர் அறிவிப்பு...

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான, தனது முடிவு குறித்து, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று மாலை அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முதல்வர் பதவிக்கு குறி வைத்தார் சசிகலா. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமைந்ததால், அவர் பெங்களூர் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். 
 
எனவே, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதமும் ஆளுநரிடம் நேற்று சமர்பிக்கப்பட்டது. 
 
ஏற்கனவே, சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை பெற்றது என்பது உள்ளிட்ட பல புகார்களை ஓ.பி.எஸ் ஆளுநரிடம் கூறிவிட்டு, அவரிடமிருந்து சாதகமான பதில் வரும் என காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது 11 எம்.பி. மற்றும் 11 எம்.ல்.ஏக்கள் அவர் பக்கம் உள்ளனர். இன்னும் பலர் எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஓ.பி.எஸ் இருக்கிறார்.


 

 
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களின் மனநிலை என்னவென்றே தெரியவில்லை. எனவே, தொடர்ந்து ஆளுநர் பொறுமை காத்து வருவது, குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என அரசியல் கட்சிகள்  புகாஅர் கூறி வருகின்றன.
 
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான தனது முடிவை, ஆளுநர் இன்று மாலை அறிவிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது. அவரின் முடிவைப் பொறுத்து, தமிழக அரசியலில் அடுத்து நடக்கும் பரபரப்பான முக்கிய நிகழ்வுகளை காண்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்...